நிலவில் தனது தேசியக் கொடியை சீனா நாட்டியுள்ளது. நிலவில் பாறை மற்றும் மணல் மாதிரிகளைச் சேகரித்துவரச் சென்ற சீனாவின் சாங்கே-5 விண்களலம் அங்கிருந்து புறப்பட முன்னர் சீனாவின் கொடியை நாட்டியுள்ளது.
அமெரிக்கா நிலவில் தனது தேசியக் கொடியை முதன் முதலில் நிலவில் நாட்டி சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நாட்டியுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் காற்றில்லாமல் அசைவற்று இருக்கும் ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட சீனாவின் செங்கொடி பறக்கும் படத்தை சீனாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான சீன தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த படங்கள் கடந்த வியாழக்கிழமை நிலவின் பாறை மாதிரிகளுடன் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் சாங்கே -5 விண்கலத்தின் கமரா மூலம் எடுக்கப்பட்டன.
முந்தைய இரண்டு சீன நிலவுப் பயணங்களில் கைவினைப் பூச்சுகளால் ஆன கொடிகள் பயன்படுத்தப்பட்டன. எனவே அவற்றை நிலவில் நாட்ட முடியவில்லை.
1969-ஆம் ஆண்டு அமெரிக்கா நிலவுக்குக்கு அனுப்பிய அப்பல்லோ-11 விண்வெளித் திட்டத்தின் போது நிலவில் அமெரிக்காவின் முதல் கொடி நாட்டப்பட்டது. எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நாட்டினார்.
ஆல்ட்ரின், அமெரிக்க கொடியை, அப்பல்லோ-11 விண்கலத்துக்கு அருகிலேயே நாட்டினார். விண்கலம் சந்திரனில் இருந்து புறப்படும் போது தான் நாட்டிய அமெரிக்கக் கொடி சேதமாகி இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் அவர் கூறினார்.
1972-ஆம் ஆண்டு வரை அடுத்தடுத்து நிலவுக்குப் பயணித்த ஐந்து விண்வெளித் திட்டங்களின்போது மேலும் ஐந்து அமெரிக்கக் கொடிகளை நிலவில் அமெரிக்கா நாட்டியது.
அமெரிக்கா நாட்டிவைத்த கொடிகளில் ஐந்து கொடிகள் அப்படியே இருப்பதாக, செயற்கைக் கோள் படங்கள் காட்டுவதாக கடந்த 2012-ஆம் ஆண்டு நாசா குறிப்பிட்டது. சூரியனின் வெளிச்சத்தால் இந்த கொடிகள் நிறமிழந்து வெளுத்துப் போயிருக்கலாம் என நிபுணர்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்கள்.
இதேவேளை, சீனா நிலவில் நாட்டியுள்ள கொடி 2 மீட்டர் அகலமும் 90 சென்டிமீட்டர் உயரமும் சுமார் ஒரு கிலோ எடையும் கொண்டது எனவும் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.